தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை! சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு
தடுப்பூசி போடாதவர்களுக்கு கோயம்பேடு சந்தையில் அனுமதி இல்லை என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.
கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஊரடங்கு வரும் 07-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 முதல் 14-6-2021 காலை 6 மணி வரை சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன் படி 7-6-2021 முதல் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கோயம்பேடு சந்தையில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ககன்தீப் சிங் பேடி, சென்னை கோயம்பேட்டில் வியாபாரிகள் உட்பட 6,340 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அனைத்து வியாபாரிகளுக்கும் கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.