வட இந்தியாவில் வைரலாகும் முதல்வர் விஜய் குறித்த போலி செய்திகள் - தேசிய அளவில் முன்னிறுத்தப்படுகிறாரா?
முதல்வர் விஜய் குறித்த செய்திகள் வட இந்தியாவை சேர்ந்த சமூகஊடக பக்கங்களால் அதிகளவில் பரப்பப்பட்டு வருகிறது.
முதல்வர் விஜய்யை வைத்து பரப்பப்படும் போலி செய்திகள்
தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டு, முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், கட்சி தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலே இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

தேர்தல் பிரச்சரத்தின் போது விஜய் பேசிய வீடியோக்களை, சில நிமிடங்களில் அவரது கட்சியின் விர்ச்சுவல் வாரியர்ஸ் சமூக வலைத்தளங்கள் மூலம் மில்லியன்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
ஆட்சிக்கு வந்த பின்னரும், விஜய்யின் அதிரடி நடவடிக்கைகளை உடனுக்குடன் ரீல்ஸ் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.
ஆனால், இதில் பல முந்தைய அரசின் திட்டங்களை தவெக ஆட்சியில் நடைபெற்றதாக தவெகவினர் பரப்புவதாக விமர்சனங்கள் எழுந்தது.
சமீபத்தில் லஞ்சம் கேட்பவர்கள் குறித்து புகார் அளித்தால், புகார் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக ஒரு செய்தியை பரப்பினர்.
பின்னர், அந்த செய்தி போலியாக உருவாக்கப்பட்டது என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்தது.
வடஇந்தியாவில் வைரலாகும் முதல்வர் விஜய்
இப்போது தமிழ்நாட்டை தாண்டி, குறிப்பாக உத்தரபிரதேசம், பீகார், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களை சேர்ந்த சமூகஊடக Influencers பலரும் முதல்வர் விஜய் குறித்த பொய்யான தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதனை வட இந்தியாவை சேர்ந்த ஊடகமான IndiaToday அம்பலப்படுத்தியுள்ளது.
ஒரு தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் இறந்தால், அவரது முழு மருத்துவக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாக ஒரு போலியான வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர்.
ஒரு சிலர், இது குறித்து முதல்வர் ஆலோசித்து வருவதாக, பரிந்துரைத்துள்ளதாக கூறிய நிலையில், சிலர் முதல்வர் நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவே பகிர்ந்துள்ளனர்.

லட்சக்கணக்கான பின்தொடர்பவர்களை வைத்துள்ள சமூக ஊடக Influencers பகிர்ந்த வீடியோக்களை பல மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. பலரும் கமெண்ட்களில் முதல்வர் விஜய்க்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதே போல், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 24 மணி நேரத்தில் தூக்கிலிடப்படுவார்கள் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளதாக பல வட இந்திய சமூகஊடக பக்கங்கள் மற்றும் Influencers பகிர்ந்துள்ளனர்.
இது பொய் செய்தி என அறியாத வட இந்திய பயனர்கள் பலரும் உண்மை என நம்பி இதற்கு முழு ஆதரவும் அளிக்கிறோம் என கமெண்ட் செய்துள்ளனர்.
ஒரு சிலர் இப்படி உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பில்லை, இது மோடிக்கு பரப்பட்டது போல் போலியான செய்திகள் பரப்படுகிறது என கமெண்ட் செய்துள்ளனர்.
மோடி பிரதமர் ஆவதற்கு முன்னர் குஜராத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பல்வேறு மொழிகளில் திட்டமிட்டு பொய் செய்தி பரப்பப்பட்டு மோடி அலை உருவாக்கப்பட்டது.
முதல்வர் விஜய் குறித்து போலியான செய்தி வெளியிட்ட சமூக ஊடக Influencers பலரை IndiaToday தொடர்புகொண்டு, ஏன் தவறான தகவல்களைப் பரப்புகிறீர்கள் என்று கேட்ட போது அவர்களில் யாரும் பதிலளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இந்த வீடியோக்களை சமூகஊடகங்களில் பார்க்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் ஏன் இவ்வாறு ஒரே மாதிரியான போலி செய்திகள் வட இந்திய சமூக ஊடக பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது இது திட்டமிட்டு பரப்படுகிறதா?, முதல்வர் விஜய் தேசிய அளவில் மோடிக்கு நிகராக முன்னிறுத்தப்படுகிறாரா?என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |