இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய எரிவாயு போதாது: அச்சத்தில் ஜேர்மன் மக்கள்...
எரிவாயு பிரச்சினை பல்வேறு நாடுகளை பலவகையில் கடுமையாக பாதிக்கத் துவங்கியுள்ளது.
ஜேர்மனியில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யக்கூட எரிவாயு போதாது என்ற நிலை உருவாகலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தபோது, அதை வெறும் செய்தியாக பார்த்த பலர், இப்போது அதன் தாக்கத்தை நன்கு உணரத்துவங்கியுள்ளார்கள்.
உணவுப்பொருட்கள் விலை உயர்வு முதல் எரிவாயு பற்றாக்குறை வரை பல நாடுகளை கடுமையாக பாதித்துள்ள நிலையில், ஜேர்மனியில் தங்கள் அன்பிற்குரியவர்கள் மரணமடையும்போது, அவர்களுடைய உடலை தகவனம் செய்யக்கூட போதுமான எரிவாயு கிடைக்குமா என்ற அச்சம் உருவாகத் துவங்கியுள்ளது.
Credit: Newsflash
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து பல நாடுகள் ரஷ்யா மீது தடைகள் விதிக்க, பதிலுக்கு ரஷ்யா ஐரோப்பாவுக்கு வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்தது.
அதனால் ஏற்கனவே ஜேர்மனியில் எரிவாயு விலை விண்ணைத்தொட்டுள்ள நிலையில், Nord Stream எரிவாயு குழாய் சேதப்படுத்தப்பட்ட விடயத்தால் தற்போது ஜேர்மனியின் சில பகுதிகளில் எரிவாயு ரேஷன் முறையில் விநியோகிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலை மேலும் மோசமடையலாம் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.
ஜேர்மனியில் வாழும் 90 சதவிகிதத்தினர், தாங்கள் இறந்தால், தங்கள் உடல்கள் தகனம் செய்யப்படவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
ஆனால், எரிவாயு கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து உடல்களும் தகனம் செய்யப்படுவது சாத்தியமில்லை. அந்த உடல்களை பாதுகாத்து வைக்கும் வசதியும் இல்லை. ஆக, இறந்தவர்களின் விருப்பத்துக்கு மாறாக அவர்களுடைய உடல்களை புதைக்கும் ஒரு நிலை காணப்படுகிறது.
Credit: Rex
இன்னொரு பிரச்சினை என்னவென்றால், எரிவாயு பிரச்சினையை சமாளிப்பதற்காக வீடுகளை வெப்பப்படுத்தும் வெப்ப நிலையைக் குறைக்க அரசு உத்தரவிட்டது.
அதுவும் இறுதிச்சடங்கு மையங்களில் சாத்தியமில்லை. அதாவது, தகனம் செய்யும் அமைப்புகள் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருப்பது அவசியம்.
ஆகமொத்தத்தில், எரிவாயு பிரச்சினையால், இறந்தவர்களின் விருப்பப்படி அவர்களுடைய உடல்களை தகனம் செய்வதில்கூட பிரச்சினை ஏற்படலாம் என்ற அச்சம் ஜேர்மனியில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.