திருவொற்றியூரில் சீமானுக்கு கடும் பின்னடைவு... தலைசுற்ற வைக்கும் வாக்கு வித்தியாசம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது. இதில், அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் திமுக, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். அதேபோல், திமுக கூட்டணி கட்சிகளும் கணிசமான இடங்களில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து வருகின்றன.
காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக என அனைத்து கூட்டணி கட்சிகளும் பல இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 159 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.
அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதர கட்சிகளில் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அமமுக ஆகிய மூன்றும் எந்த இடத்திலும் முன்னிலையில் இல்லை.
இந்த நிலையில், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார்.
இதில், திமுக வேட்பாளர் கே.பி.சங்கரைவிட 37,510 வாக்குகள் குறைவாக பெற்று சீமான் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். திருவொற்றியூர் தொகுதியில் காலை முதலே திமுக வேட்பாளர் சங்கர் தொடந்து முன்னிலை பெற்று வந்த நிலையில், அவர் வெற்றிப் பெற்றிருக்கிறார்.
அதிமுக வேட்பாளர் இந்த தொகுதியில் இரண்டாம் இடம் பிடித்தார். எனினும், நாம் தமிழர் கட்சியின் மற்ற வேட்பாளர்கள் 10,000க்கும் குறைவாக வாக்குகள் பெற்ற நிலையில், சீமான் இங்கு 35,000க்கும் அதிகமான வாக்குகளை கடந்தார்.
ஒட்டுமொத்தமாக, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவுகிறது.
இருப்பினும், பல இடங்களில் மூன்றாம் இடம் பிடித்துள்ளதால், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்கும் நிலையில் உள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முழு அதிகாரப்பூர்வ எண்ணிக்கை கிடைத்த பிறகே நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதமும் அப்போது தெரியவரும்.