உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது: சீமான்
உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 138 மாவட்ட கவுன்சிலர், 1,375 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சி தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6 மற்றும் 9 திகதி களில் இரு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 13ம் திகதி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடந்து வருகிறது.
ஆளும் கட்சியான திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஈகி சங்கரலிங்கனார் நினைவுநாள் கருத்தரங்கத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என கூறினார்.
சீமான் கூறியதாவது, உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வார்டுகள், ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளை வென்றுள்ளோம்.
இதை எப்படி படுதோல்வி என கருத முடியும்? இது எப்படி படுதோல்வி ஆகும்? வளருகிற கட்சி கொஞ்ச கொஞ்சமாக தான் வளர முடியும், ஒரே நாளில் ஒரு செடி பூப்பதும் காய்ப்பதும் கிடையாது.
களத்தில் நிற்கும் நாங்களே அதை தோல்வி என நினைக்கவில்லை, வேடிக்கை பார்க்கும் நீங்கள் ஏன் அதை நினைக்கிறீர்கள், இது அவசியமற்றது உங்களுக்கு.
திமுக அதிமுக தனித்து போட்டியிடுமா? இன்று இல்லை என்றால் நாளை மக்களுக்கு எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என சீமான் கூறினார்.