தடுப்பூசிக்கு பதில் உப்புக்கரைசலை செலுத்திய செவிலியர்: வெளியான உண்மை நிலவரம்
ஜேர்மனியில், பைசர் நிறுவனத் தயாரிப்பான கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ஆறு பேருக்கு உப்புக் கரைசலை செலுத்திய செவிலியர் ஒருவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆகவே, அன்றையத்தினம் குறிப்பிட்ட தடுப்பூசி மையத்தில், தடுப்பூசி போட்டுக்கொண்ட 200 பேரும் திரும்ப அழைக்கப்பட்டு சோதனைகளுக்குட்படுத்தப்பட உள்ளார்கள்.
அவர்களது இரத்தத்தில் ஆன்டிபாடிகள் உள்ளனவா என சோதித்து, அதன் அடிப்படையில் அவர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதா அல்லது, உப்புக்கரைசல் செலுத்தப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
வடக்கு ஜேர்மனியில் உள்ள Wilhelmshaven/Friesland என்ற இடத்தில், செவிலியர் ஒருவர் தடுப்பு மருந்தைக் கையில் எடுக்கும்போது, கை தவறி கீழே போட்டுவிட்டார்.
அந்த சிறிய கண்ணாடி போத்தல் உடைந்துவிட்டிருக்கிறது. வெளியே தெரிந்தால் தன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பயந்து, நடந்ததை மறைத்து, தடுப்பூ மருந்தை நீர்க்கச் செய்ய உதவும் உப்புக்கரைசலை ஆறு பேருக்கு செலுத்திவிட்டு ஒன்றும் தெரியாததுபோல அமைதியாக இருந்து விட்டிருகிறார் அந்த பெண்.
பின்னர், அவர் இந்த விடயத்தைத் தன் சக செவிலியர் ஒருவரிடம் பகிர்ந்துகொள்ள, உடனே அந்த பெண் இந்த விடயத்தை தன் மேலதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
பொலிசார் அந்த செவிலியர் மீது, உடலுக்கு ஊறு விளைவித்ததாக குற்றம் சாட்டி, விசாரணை ஒன்றை துவக்கியுள்ளனர்.