உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் யார் வெல்வார்? பிரட்லீயின் கணிப்பும், சொன்ன காரணமும்
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட்லீ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் யார் வெல்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி வரும் ஜுன் மாதம் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கான இந்திய அணி அங்கு சென்றுவிட்டது. நியூசிலாந்து அணி, இந்த போட்டிக்கு முன், இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதால், அந்தணி முன்னரே சென்று, இப்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி குறித்து, அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ கூறுகையில், என்னைப் பொறுத்த வரை இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தின் கையே ஓங்கியிருக்கும்.
ஏனெனில், நியூசிலாந்து மைதானமும், இங்கிலாந்து மைதானமும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால், நியூசிலாந்து பவுலர்களுக்கு இந்த மைதானங்கள் பெரிதளவு கைகொடுக்கும்.
இதனால், நியூசிலாந்து பவுலர்கள் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் இந்திய அணிக்கு எதிராக பந்து வீச முடியும் என்பதால், நியூசிலாந்து அணியின் கையே மேலோங்கி உள்ளது என்றே நான் கருதுகிறேன்.
பேட்டிங்கை பொறுத்தவரை இரு அணிகளும் சம பலத்துடன் இருந்தாலும் பந்துவீச்சில் நியூசிலாந்து அணிக்கு சற்று சாதகமாக இருக்கும் என்று நான் நம்புவதால் எந்த அணி சிறப்பாக பந்துவீசுகிறதோ அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று பிரெட் லீ கூறியுள்ளார்.