சுகாதார அமைச்சரை துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் எஸ்.ஐ! ஒடிசாவில் பரபரப்பு
ஒடிசா மாநில சுகாதார அமைச்சரை பொலிஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநில சுகாதார அமைச்சர் நபா கிசோர் தாஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணியளவில் ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகர் அருகே காந்தி சௌக் பகுதியில் உதவி சப்-இன்ஸ்பெக்டரால் சுடப்பட்டார்.
அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்று கொண்டிருந்தபோது, அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
உதவி சப்-இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் இரண்டு முறை அமைச்சரின் நெஞ்சில் சுட்டார். இதில் அமைச்சர் நபா கிசோர் தாஸ் படுகாயமடைந்தார்.
OTV
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் விமானம் மூலம் புவனேஸ்வருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோபால் தாஸ் உள்ளூர் மக்களால் பிடிக்கப்பட்டார், மேலும் காவலில் வைக்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்
அமைச்சர் தனது வாகனத்தில் இருந்து இறங்கிய போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சாட்சிகள் கூறுகின்றனர். தாக்குதலின் பின்னணியில் உள்ள காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் பிரஜராஜ்நகறில் பதற்றம் நிலவியது.
இந்த தாக்குதலுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, நபா கிசோர் தாஸ் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.