இரவில் கேட்கும் வித்தியாசமான சத்தம்... ஜேர்மனியில் வாழும் அமெரிக்கர்களை பாதித்துள்ள வித்தியாசமான பிரச்சினை
ஜேர்மனியில் வாழும் அமெரிக்கர்கள் சிலர் ஒரு வித்தியாசமான பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதாவது இரவு நேரத்தில் ஒரு கீச்சிடும் குரல் காதுகளில் கேட்பதாகவும், அதற்குப்பின், தலை சுற்றல், மயக்கம், வாந்தி வருவது போன்ற ஒரு உணர்வு, அதைத்தொடர்ந்து மூக்கிலிருந்து இரத்தம் வருதல் ஆகிய பிரச்சினைகளை அவர்கள் சந்தித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், இதற்கு முன்னும், பல நாடுகளிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்த பிரச்சினையை சந்தித்துள்ளார்கள். அது Havana Syndrome என அழைக்கப்படுகிறது.
முதன்முதலாக, 2016ஆம் ஆண்டு, கியூபாவிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டது. அதன் பின்னணியில் ரஷ்யா முதலான பல்வேறு நாடுகள் இருப்பதாக கூறப்பட்டது. மைக்ரோவேவ் அலைகள் அல்லது சோனிக் அலைகளை பரப்புவதால் இந்த பிரச்சினை ஏற்படுவதாகவும், வேண்டுமென்றோ அல்லது இயந்திரம் ஒன்றிலுள்ள கோளாறு காரணமாகவோ இந்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், அது ஏன் குறிப்பாக அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் ஏற்படுகிறது என்ற கேள்விக்கு பதிலில்லை.
இந்த தகவல் உறுதிசெய்யப்படும் பட்சத்தில், நேட்டோ உறுப்பு நாடு ஒன்றில் தங்கியிருக்கும் அமெரிக்க அதிகாரிகளிடம் இந்த பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டது இதுதான் முதல்முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.