எரிவாயு கட்டணம்... பிரித்தானிய வாடிக்கையாளர்களிடம் கெஞ்சும் Ofgem
பிரித்தானியாவில் எரிவாயு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டணம் செலுத்துவதை புறக்கணிக்க வேண்டாம் என வாடிக்கையாளர்களிடம் Ofgem கோரிக்கை வைத்துள்ளது.
பிரித்தானியாவில் எரிவாயு கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அடுத்து, அக்டோபர் 1 முதல் எரிவாயு கட்டணங்களை செலுத்தாமல் புறக்கணிக்க மக்கள் முடிவு செய்து இயக்கம் ஒன்றையும் உருவாக்கியுள்ளனர்.
இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக பல்லாயிரக்கணக்கான மக்கள் எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கான முன்கூட்டியே செலுத்தும் கட்டணங்களை ரத்து செய்துள்ளனர். எரிசக்திக்கான அதிக கட்டணங்களை செலுத்தியே மில்லியன் கணக்கான மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படுவார்கள் என சமூக ஆர்வலர்கள் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் Ofgem முதன்மை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், தற்போதைய சூழலில் எரிசக்தி கட்டணங்களை செலுத்துவதில் மக்கள் கவலை கொண்டுள்ளதாக தெரியும் எனவும், ஆனால் அதற்காக கட்டணம் செலுத்துவதில் இருந்து மக்கள் பின்வாங்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கட்டணம் செலுத்த தவறினால், அதன் பாதிப்பு தனிப்பட்ட முறையில் இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே அக்டோபர் 1ம் திகதிக்கு முன்னர் 1 மில்லியன் மக்களை எரிசக்தி கட்டணம் செலுத்துவதில் இருந்து பின்வங்க வைக்க முடியும் என Don’t Pay இயக்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.