ஈரான் போருக்கு முந்தைய நிலைக்கு சரிந்த எண்ணெய் விலை
ஹார்முஸ் நீரிணை வழியாக அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் கப்பல்கள் வெளியேறியதைத் தொடர்ந்து, பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் போர் தொடங்குவதற்கு முந்தைய நிலையை விட எண்ணெய் விலைகள் சரிந்துள்ளன.
குறைந்தபட்ச நிலை
பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதற்கு முந்தைய நாளை விடச் சற்று குறைவாக, வியாழக்கிழமையன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 72.24 டொலர் என்ற குறைந்தபட்ச நிலைக்குச் சரிந்தது.

இந்த மாதம் மட்டும் இதுவரை எண்ணெய் விலைகள் 20 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்துள்ளன. ஆகஸ்ட் மாத விநியோகத்திற்கான ப்ரெண்ட் கச்சா எண்ணெய், 73.59 டொலர் விலையுள்ள செப்டம்பர் மாத விநியோகத்தை விடக் குறைந்த விலையில் வர்த்தகமானது; இது குறுகிய காலத்தில் போதுமான அளவு விநியோகம் இருப்பதை உணர்த்துகிறது.
இதனிடையே, வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் ஹார்முஸ் நீரிணையில், கடந்த 24 மணி நேரத்தில் கப்பல் போக்குவரத்து இருமடங்காகி, பிப்ரவரி மாத இறுதிக்குப் பிறகு மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் தற்போது தங்கள் செயற்கைக்கோள் சமிக்ஞைகளை (satellite signals) இயக்கிய நிலையில் பயணிக்கின்றன என்ற செய்தி, கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உதவியுள்ளது என்கிறார் மூத்த ஆய்வாளர் ஒருவர்.
ஈரான் மோதலால் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் உலகளாவிய எரிசக்தித் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மெல்ல விலகி வருகிறது; அதேவேளையில், கச்சா எண்ணெய் விலையும் நெருக்கடிக்கு முந்தைய நிலையை நோக்கிச் சரிந்து வருகிறது என்கிறார் இன்னொரு ஆய்வாளர்.
மீண்டும் பதற்றம்
ஈரானின் புரட்சிகரப் படையினரிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், ஐ.நா.வின் கடல்சார் அமைப்பு பரிந்துரைத்த ஓமனுக்கு அருகிலுள்ள புதிய பாதையைப் பயன்படுத்தி, லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட எண்ணெய் கப்பல் ஒன்று வியாழக்கிழமையன்று அந்த நீரிணையிலிருந்து வெளியேறியது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இடைக்கால ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தொடர்பாக மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, நிரந்தர அமைதி ஒப்பந்தம் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 60 நாள் கால அவகாசத்தை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒரு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமையன்று சமீபத்திய போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த பிறகு, அந்த நாட்டில் இஸ்ரேல் நடத்திய முதல் வான்வழித் தாக்குதல் இதுவாகும். ஆனால், பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நெருக்கடியான சூழலில், இனி எண்ணெய் விலை 60 முதல் 80 டொலருக்கு மத்தியில் இருக்கும் என்றும், 50 டொலருக்கு கீழ் சரியும் வாய்ப்புகள் இனி இல்லை என்றும் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |