ஒமைக்ரானின் பரவும் தன்மை குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய தகவல்
ஒமைக்ரானின் பரவும் தன்மை குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் ஒமைக்ரான் மாறுபாடு டெல்டாவை விட அதிகமாக பரவுகிறது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக பிரதமர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை காலை அமைச்சரவைக் கூட்டத்தில் சமீபத்திய கொரோனா நிலைமை குறித்து தனது அமைச்சர்கள் குழுவைப் புதுப்பித்தபோது போரிஸ் ஜான்சன் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
ஒமைக்ரான் குறித்து ஆய்வுகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் அதன் பண்பு குறித்து ஒரு முடிவுக்கு வர முடியாது.
ஆனால் இது டெல்டாவை விட அதிகமாக பரவக்கூடியது என்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் இருக்கின்றன என்று கூட்டத்தில் பிரதமர் கூறியதாக அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
‘பிளான் பி’ நடவடிக்கைகளை கொண்டு வரலாமா என்பது குறித்து பிரதமரின் உயர்மட்ட குழுவில் எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
திங்கட்கிழமை வரை பிரித்தானியாவில் மொத்தம் 336 ஒமைக்ரான் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து 261, ஸ்காட்லா்நது 71 மற்றும் வேல்ஸில் 4.
இதனிடையே பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் உள்ள சில ஆப்பிரிக்க நாடுகளில் பதிவானதை விட விரைவில் பிரித்தானியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்கும் என விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார்.