ஜேர்மன் மாகாணம் ஒன்றில் தடுப்பூசி பெற்றவர்களுக்குள் பயங்கரமாக பரவும் கொரோனா வைரஸ்
ஜேர்மன் மாகாணம் ஒன்றில், கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மன் மாகாணங்களிலேயே சிறிய மாகாணமான Bremen மாகாணத்தில்தான் தடுப்பூசி பெற்றவர்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது.
ஆனால், இந்த மாகாணம்தான் ஜேர்மனியிலேயே அதிக அளவில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய மாகாணம் ஆகும்.
சுமார் 700,000 பேரைக் கொண்ட மாகாணமான Bremen மாகாணத்தில், சுமார் 84 சதவிகிதம் மக்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியும் பெற்றாயிற்று.
அத்துடன், சுமார் 44 சதவிகிதம் மக்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் பெற்றுவிட்டார்கள்.
ஆனாலும், நாட்டிலேயே அதிக அளவிலான கொரோனா தொற்று Bremen மாகாணத்தில்தான் காணப்படுகிறது.
வியாழக்கிழமை நிலவரப்படி, இம்மாகாணத்தில், ஏழு நாட்களில் 100,000 பேரில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உருவாகியுள்ளது என்பதைக் காட்டும் எண்ணிக்கையும் 800 ஆக உள்ளது. தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 303ஆக உள்ள நிலையில், இம்மாகாணத்தில், அது தேசிய அளவை விட இரண்டு மடங்குக்கும் அதிகமாக காணப்படுவதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
Bremen மாகாணத்தில், கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களில் 85 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் Omicron வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஆனால், தேசிய அளவில், அதாவது மொத்த ஜேர்மனியிலும் 44 சதவிகிதத்தினர் மட்டுமே Omicron வகை கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும் Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
Omicron வகை கொரோனா வைரஸ் தடுப்பூசிகளையும் தாண்டி தொற்றை உருவாக்கக்கூடியது என்பதற்கு Bremen மாகாணம் ஆதாரமாகியுள்ளது.
ஆனாலும், தடுப்பூசிகள் கொரோனா தொற்றால் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதைத் தடுக்கின்றன என்பதையும் நிரூபிக்கும் வகையில், Bremen மாகாணத்தில் முதல் மூன்று அலைகளின்போது இருந்தது போல் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியவில்லை.
இருந்தாலும், மருத்துவமனைகளின் மற்ற பிரிவுகள், அதாவது தீவிர சிகிச்சைப்பிரிவு அல்லாத பிரிவுகள் ஏற்கனவே குறைந்த அறிகுறிகள் கொண்ட நோயாளிகளால் நிரம்பிவிட்டதாகவும், வரும் நாட்களில் நிலைமை மோசமாகலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.