ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசி தர உறுதி! யாருக்கு தெரியுமா? G7 மாநாட்டிற்கு பின் போரிஸ் சொன்ன முக்கிய தகவல்
பிரித்தானியாவில் நடைபெற்ற ஜி 7 உச்சி மாநாட்டில் உலகத்தலைவர்கள் ஏழை நாடுகளுக்க் ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசி கொடுப்பதற்கு உறுதி அளித்துள்ளதாக, போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்கா, இத்தாலி, கனடா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற தொழிலில் முன்னிலை வகிக்கும் 7 நாடுகளை கொண்ட கூட்டமைப்பு தான் G7 கூட்டமைப்பு.
இந்த கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு கடந்த 10-ஆம் திகதிபிரித்தானியாவின் Cornwall-ல் துவங்கியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக G7 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசி வந்தனர்.
இதையடுத்து கொரோனா பரவல் குறைந்த நிலையில், பிரித்தானியாவில் இந்த கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், இத்தாலி பிரதமர் மரியோ தராகி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோருடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயென், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஆகியோர் பங்கேற்றனர்.
இரண்டு தினங்களாக நடைபெற்ற இந்த கூட்டமைப்பு மாநாடு முடிவு பெற்றது. இதன் முடிவு நாளில், பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஏழை நாடுகளுக்கு ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசி கொடுப்பதற்கு G7 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள், அதாவது உலகத் தலைவர் உறுதியளித்துள்ளதாக கூறினார்.
இந்த தொற்று நோயை நாம் தோற்கடிக்க வேண்டும். இதனல் G7 கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் ஏழை நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது உலக சுகாதார அமைப்பின் கோவாக்சின் திட்டத்தின் மூலமாகவோ தடுப்பூசிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த மாநாட்டிற்கு பின் வெளியான அறிக்கையில், தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீவிர முயற்சியாக கொரோனா தடுப்பூசி உள்ளது. இதனால் முடிந்தவரை இதை விரைவாக மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
அப்போது தான் நாம் இந்த தொற்று நோயை தடுக்கும் வலுவான எதிர்காலத்தை உருவாக்க முடியும். மேலும், காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் பேசப்பட்டன.
வரும் 2050-ஆம் ஆண்டில் ஜுரோ அளவிலான மாசுபாடு இல்லாத இலக்கை அடைய வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளதாகவும், இதற்காக பெரும்பாலான நிலக்கரி எடுப்பதை, அகற்றுவது குறித்து கலந்தாலோசித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், கொரோனாவிற்காக கண்டுபிடிக்கப்பட்ட Oxford-AstraZeneca தடுப்பூசி பற்றி பேசிய போரிஸ், உலகம் எங்கிலும் இதுவரை 1.5 பில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதை நினைத்து மிகவும் பெருமைப்படுவதாக கூறிய அவர், முடிந்தவரை விரைவாக தடுப்பூசிகளை தயாரித்து வருகிறோம்,
அவற்றை எங்களால் முடிந்தவரை வேகமாக விநியோகிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டின் இறுதிற்கு உலகம் முழுவதிலும் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை நாங்கள் வைத்துள்ளதாகவும், இதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நன்றி எனவும் அவர் குறிப்பிட்டார்.