கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எத்தனை தடுப்பூசி போடுவது? ஆய்வில் வெளியான புதிய தகவல்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஒரே ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தினால் போதுமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைந்தவர்கள், தடுப்பூசி போடலாமா, வேண்டாமா அல்லது எத்தனை டோஸ்கள் செலுத்தவேண்டும் என்று பல கேள்விகளுடன் குழப்பத்தில் இருக்கின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து ஹைதராபாத்தில் உள்ள AIG மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் Infectious Disease Journal எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், பெருந்தொற்றிலிருந்து பாதிக்கப்பட்டு குணமடைந்த 260 சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 5 வரை கோவிஷீல்ட் தடுப்பூசியின் ஒரு டோஸ் செலுத்தப்பட்டது.
இதன்முலம், தோற்றால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருக்கும் நினைவக செல்கள் (Memory Cells) எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்பதை ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் முடிவில், கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் உடலில், ஒரு டோஸ் செலுத்தியதும் நிறைய ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
குறிப்பாக, வைரஸால் பாதிக்கப்படும் முன்பே 2 டோஸ்களையும் செலுத்தியவர்களின் உடலில் உற்பத்தியான ஆன்டிபாடிகளை விட, அவர்களின் உடலில் அதிக ஆன்டிபாடிகள் உற்பத்தி ஆகி இருப்பதாக ஆய்வின் முடிவில் கண்டறிந்துள்ளனர்.
இதன் அடிப்படையில், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசியே போதுமானது மற்றும் மிகுந்த பாதுகாப்பை அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தொற்றிலிருந்து மீண்டு குணமாவார்கள், பாதிக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவை இல்லை என இந்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.