ஒரே ஊசியில் 30 மாணவர்ளுக்கு தடுப்பூசி! 'இது என் தவறா?' நபர் அளித்த பதிலால் பரபரப்பு
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் ஒரே ஒரு ஊசியை பயன்படுத்தி 30 பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய அரசு ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சாகர் நகரில் உள்ள ஜெயின் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று பள்ளி மாணவர்களுக்கான கோவிட் தடுப்பூசி முகாமின் போது இந்த சம்பவம் நிகழ்ந்தது. குழந்தைகளுக்கு ஒற்றை ஊசி மூலம் தடுப்பூசி போடப்பட்டதைக் கண்டு பெற்றோர் பதற்றமடைந்தனர்.
தடுப்பூசி போட்ட ஜிதேந்திரா, அதிகாரிகளால் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே அனுப்பப்பட்டதாகவும், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுமாறு "துறைத் தலைவர்" உத்தரவிட்டதாகவும் கூறினார். மாணவிகளின் பெற்றோர்கள் பதிவு செய்த வீடியோவில், ஜிதேந்திரா தனது பெயர் தெரியாது என்று கூறியுள்ளார்.
எச்.ஐ.வி பரவத் தொடங்கியதிலிருந்து 1990-களில் இருந்து ஒருமுறை பயன்படுத்தப்படும் டிஸ்போசபிள் சிரிஞ்ச்கள் பயன்பாட்டில் உள்ளன.
"பொருட்களை டெலிவரி செய்த நபர் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே கொடுத்தார்," என்று ஜிதேந்திரா கூறியதை பதற்றமடைந்த பெற்றோர்கள் அந்த இடத்திலேயே வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
பல நபர்களுக்கு ஊசி போட ஒரு ஊசி பயன்படுத்தப்படக்கூடாது என்று உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டதற்கு, ஜிதேந்திரா, "எனக்கு அது தெரியும். அதனால்தான் நான் ஒரு ஊசியைப் பயன்படுத்த வேண்டுமா என்று அவர்களிடம் கேட்டேன், அவர்கள் 'ஆம்' என்று சொன்னார்கள். இது எப்படி என்னுடைய தவறாகும்? என்னிடம் என்ன செய்யச்சொன்னார்களோ அதைத் தான நான் செய்தேன்" என்றார்.
மத்திய அரசின் "ஒரு ஊசி, ஒரு சிரிஞ்ச், ஒரு முறை" என்ற உறுதிமொழியை அலட்சியமாகவும், அப்பட்டமாக மீறியதாகவும் ஜிதேந்திரா மீது சாகர் மாவட்ட நிர்வாகம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.
Shocking violation of “One needle, one syringe, only one time” protocol in #COVID19 #vaccination, in Sagar a vaccinator vaccinated 30 school children with a single syringe at Jain Public Higher Secondary School @ndtv @ndtvindia pic.twitter.com/d6xekYQSfX
— Anurag Dwary (@Anurag_Dwary) July 27, 2022
தடுப்பூசி மற்றும் தேவையான பிற பொருட்களை காலையில் அனுப்பும் பொறுப்பில் இருந்த மாவட்ட நோய்த்தடுப்பு அலுவலர் மருத்துவர் ராகேஷ் ரோஷன் மீதும் துறை ரீதியான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பெற்றோர்கள் தகவல் அளித்ததை அடுத்து, உடனடியாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலரை ஆய்வு செய்யுமாறு பொறுப்பு கலெக்டர் ஷிதிஜ் சிங்கால் உத்தரவிட்டார். ஆனால், ஆய்வின் போது ஜிதேந்திரா இல்லை. சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து அவரது தொலைபேசியும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.