கனடாவில் தட்டம்மை நோயுடன் பிறந்த குழந்தை மரணம்
குறை மாதத்தில் பிறந்து தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட கனேடிய குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக, இறப்புக்கான காரணத்தை உறுதிப்படுத்தாமல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசியைப் பெறவில்லை
ஜூன் 2 அன்று வெளியான தரவுகளின் அடிப்படையில், கனடாவில் 2,755 பேர்கள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது, அதில் 2,429 பேர்களின் நோய் உறுதிப்படுத்தப்பட்டவை என்றும் 326 பேர்களுக்கு சாத்தியமிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
தட்டம்மை பாதிப்பின் மையப்பகுதி ஒன்ராறியோ மாகாணமாகும், அங்கு கிட்டத்தட்ட 2,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனிடையே, ஒன்ராறியோவின் தலைமை சுகாதார அதிகாரி கீரன் மூர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குழந்தை பிறப்பதற்கு முன்பே தாயிடமிருந்து வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும், அந்த தாயார் தட்டம்மை, சளி மற்றும் ரூபெல்லா தடுப்பூசியைப் பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறைப் பிரசவம் மற்றும் இறப்பு இரண்டிற்கும் தட்டம்மை ஒரு காரணியாக இருந்திருக்கலாம், ஆனால் வைரஸுடன் தொடர்பில்லாத பிற கடுமையான மருத்துவ சிக்கல்களையும் குழந்தை எதிர்கொண்டது என்று அவர் கூறியுள்ளார்.
மார்ச் மாதத்தில், தட்டம்மை பாதிப்பானது சில மென்னோனைட், அமிஷ் மற்றும் பிற அனபாப்டிஸ்ட் சமூகங்களை விகிதாசாரமாக பாதித்ததாக மூர் கூறினார், அந்த மக்களிடையே தடுப்பூசி விகிதங்கள் குறைவாக இருந்ததே இதற்குக் காரணம்.
தொற்றக்கூடிய சுவாச வைரஸ்
குழந்தையின் மரணத்திற்கு தட்டம்மை தான் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டால், அது தற்போதைய தொற்றுநோயுடன் தொடர்புடைய முதல் மரணத்தைக் குறிக்கும். ஒன்ராறியோவிற்குப் பிறகு, அடுத்ததாக கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி மேற்கு மாகாணமான ஆல்பர்ட்டா ஆகும், இங்கு 632 பேர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பெடரல் தரவுகள் தெரிவிக்கின்றன.
தட்டம்மை என்பது மிகவும் தொற்றக்கூடிய சுவாச வைரஸ் ஆகும், இது பாதிக்கப்பட்ட நபர் இருமல், தும்மல் அல்லது வெறுமனே சுவாசிக்கும்போது வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் பரவுகிறது.
மேலும், தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது, இதில் பொதுவாக தடுப்பூசிக்கு தகுதியற்ற 12 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் உள்ளனர்.
இது நிமோனியா, மூளை வீக்கம், குறை மாத பிறப்பு மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில் மரணம் உள்ளிட்ட கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |