அன்று சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம்! இன்று திடீர் பல்டியடிக்கும் ஓ.பி.எஸ்... ஆதரவு கருத்தால் அதிமுகவில் சலசலப்பு
ஒரு சமயத்தில் சசிகலாவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக கூறி அவரை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் தற்போது அவருக்கே ஆதரவாக கருத்து கூறியுள்ளது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2016ல் ஜெயலலிதா உயிரிழந்த பின்பு ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாவை பொதுக் குழு கூடி தேர்வு செய்த நிலையில் அவரை முதல்வராக்கவும் சில நிர்வாகிகள் விரும்பினர்.
இந்த நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என கூறிய ஓபிஎஸ், 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் திகதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார்.
பின்னர் அடுத்த இரண்டு நாட்களில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்த ஓபிஎஸ் சிறிது நேரம் தியானம் செய்துவிட்டு சசிகலாவின் நிர்பந்தத்தால்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்றும் சசிகலாவை பற்றி 10 சதவீதம் கூறியிருக்கிறேன். தேவைப்படும்போது மீதமுள்ள 90 சதவீதம் கூறுவேன் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
இதன்பிறகு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றபிறகு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கினார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்பு அவரை ஏற்க அதிமுக மறுத்தது. முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் அளித்த பேட்டியில் சசிகலா அதிமுகவில் இல்லை, அவரை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என கூறினார்.
இந்த நிலையில் சசிகலாவை அதிமுக ஏற்குமா என மதுரையில் ஓபிஎஸ்ஸுக்கு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறுகையில் அதிமுக தொண்டர்களின் இயக்கம்; இரட்டை தலைமையின் கீழ் கட்சி சிறப்பாக செயல்படுகிறது, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என கூறியிருக்கிறார்.
ஒரு பக்கம் எடப்பாடி சசிகலாவை தீவிரமாக எதிர்த்து வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அவரை மறைமுகமாக ஆதரிப்பது போல பேசுவது தொண்டர்களை குழப்பமடைய செய்துள்ளது.