நடிகர் சிவாஜி கணேசன் இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜப்தி செய்ய உத்தரவு ரத்து
ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனத்தில் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி பங்குதாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனம் சார்பில் 'ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தனர்.
அப்போது, படத்தின் தயாரிப்பிற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் இருந்து 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.
இந்த கடனை திருப்பி செலுத்தாத நிலையில் 'ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்தியஸ்தர் கடந்த 2024ம் ஆண்டு மே 4ம் திகதி உத்தரவிட்டார்.
ஆனால், இதுவரை உரிமைகளை வழங்காத நிலையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அப்போது, சிவாஜி கணேசன் வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும், நடிகர் பிரபு பெயரில் தான் உள்ளது என்றும் ராம் குமார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், இந்த வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் பிரபு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். மேலும், இதுகுறித்து வில்லங்கப் பதிவில் திருத்தம் செய்யும்படி பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |