நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட பிரித்தானிய வேளாண் மக்கள்: சூடு பிடிக்கும் போராட்டம்
தரமற்ற உணவு இறக்குமதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு நாடாளுமன்றத்தை பிரித்தானிய விவசாயிகள் முற்றுகையிட்டுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
வேளாண் மக்கள் முற்றுகை
ஐரோப்பிய நாடுகள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வேளாண் மக்கள் பல காரணங்களை குறிப்பிட்டு போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது, பிரித்தானிய நாடாளுமன்றத்தை வேளாண் மக்கள் முற்றுகையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரெக்சிட்டிற்குப் பிந்தைய வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் தரமற்ற உணவு இறக்குமதி என பல்வேறு காரணங்களை குறிப்பிட்டுள்ளனர். சுமார் 50 டிராக்டர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளது.
வேளாண் மக்கள் இல்லை என்றால் உணவில்லை, எதிர்காலம் இல்லை என பாதாகைகளும் டிராக்டர்களில் காணப்பட்டுள்ளன. அரசாங்கம் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், மிகவும் துல்லியமான உணவு லேபிளிங் நடவடிக்கைகள் தேவை என்றும் வேளாண் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், தரமற்ற உணவுகளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தங்களையும் அரசு கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இது உள்ளூர் வேளாண் மக்களை பாதிக்கும் செயல் என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
தரமற்ற உணவு இறக்குமதி
ஒவ்வொரு முறையும் வேளாண் மக்களை கைவிடும் நிலையே அரசிடம் இருந்து தொடர்வதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தங்கள் தரத்தை ஒருபோதும் விட்டுத்தருவதில்லை என உறுதி அளித்துள்ள அரசாங்கம், அதை பின்பற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
ஐரோப்பா முழுவதும், தரமற்ற உணவுகளை இறக்குமதி செய்வதற்கு எதிராகவே வேளாண் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அத்துடன் கடுமையான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு எதிராகவும் ஐரோப்பிய வேளாண் மக்கள் தெருவுக்கு வந்து போராடியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |