17 மாதங்களாக வாடகை கொடுக்காத சார் பதிவாளர் அலுவலகத்திற்கு பூட்டு போட்ட உரிமையாளர்
17 மாதங்களாக வாடகை கொடுக்காத சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உரிமையாளர் பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பூட்டு போட்ட உரிமையாளர்
தமிழக மாவட்டமான தூத்துக்குடி, கழுகுமலை மேலகேட் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகமானது சொந்த கட்டடத்தில் இயங்கி வந்தது.
ஆனால், கடந்த 2023-ம் ஆண்டு ஓக்டோபர் முதல் புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கியதால் சார்பதிவாளர் அலுவலகம் சங்கரன்கோவில் சாலையில் உள்ள கந்தசாமி என்பவரின் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு 12.09.2023 முதல் இயங்கி வருகிறது.
அப்போது, முதலில் மாத வாடகையாக ரூ.40 ஆயிரம் பேசப்பட்டது. ஆனால், அதற்கு சார் பதிவாளர் துறை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி மாத வாடகை ரூ.18,780 என முடிவு செய்யப்பட்டது.

22 வயதில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐபிஎஸ் அதிகாரி.., 6 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜினாமா செய்தது ஏன்?
தற்போது 17 மாதங்கள் ஆன நிலையில் புதிய சார் பதிவாளர் கட்டடம் திறக்கப்படுவதாக பேசப்படுகிறது. ஆனால், இதுவரை கட்டட உரிமையாளருக்கு வாடகை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து கந்தசாமி கடந்த 3-ம் திகதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், 4-ம் திகதி அன்று அலுவலகம் இயங்கி முடிந்ததும் வெளிக்கதவை பூட்டி பூட்டுப்போட்டு விட்டு அலுவலர்கள் சென்றனர்.
இந்நிலையில், நேற்று காலை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு ஏற்கனவே பூட்டு போடப்பட்டிருந்த நிலையில் மற்றொரு பூட்டை கந்தசாமி போட்டார். இதனால் பத்திரம் பதிவு செய்ய வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
அப்போது, அங்கு வந்த மக்கள் அலுவலகத்தை திறந்துவிட கேட்டுக் கொண்டனர். பின்னர் அவர் பூட்டை கழற்றினார்.
மேலும், வாடகை பணம் தருவதாகவும் அவருக்கு உறுதி அளிக்கப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் வரை பத்திரப் பதிவு நடைபெறாமல் பொதுமக்கள் காத்திருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |