128 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி: படுதோல்விக்கு பழிதீர்த்த பாகிஸ்தான்
வங்காளதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
274 ஓட்டங்களுக்கு ஆல்அவுட்
பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 274 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. மாஸ் சதாகத் 46 பந்துகளில் 75 ஓட்டங்கள் விளாசினார்.
சல்மான் அலி ஆகா 62 பந்துகளில் 64 ஓட்டங்களும், மொஹம்மது ரிஸ்வான் 44 ஓட்டங்களும், ஃபர்ஹான் 31 ஓட்டங்களும் எடுத்தனர்.
ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளும், மெஹிதி மிராஸ் 2 விக்கெட்டுகளும், தஸ்கின், முஸ்தபிசுர் மற்றும் நாஹித் ராணா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணி ஷாஹீன் அப்ரிடி மற்றும் மொஹம்மது வாசிமின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
அணியின் ஸ்கோர் 6.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 25 ஓட்டங்களாக இருந்தபோது, இடி மற்றும் மின்னல் தோன்றியதால் வீரர்களின் பாதுகாப்பு கருதி ஆட்டம் நிறுத்தப்பட்டது.

படுதோல்வி
அதன் பின்னர் DLS முறைப்படி, 32 ஓவர்களில் 243 ஓட்டங்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் 41 (33) ஓட்டங்களும், டௌஹித் ஹ்ரிடோய் 28 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆனால், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால், வங்காளதேச அணி 23.3 ஓவர்களில் 114 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் முதல் போட்டியில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் 128 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பழிதீர்த்தது.
பாகிஸ்தானின் ஹாரிஸ் ராஃப், மாஸ் சதாகத் தலா 3 விக்கெட்டுகளும், ஷாஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுகளும், வாசிம் மற்றும் அஷ்ரஃப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |