பிறந்த குழந்தையுடன் ராணியாருக்கு ஹரி வீடியோ அழைப்பு: இல்லை என மறுத்த அரண்மனை
ஹரி- மேகன் தம்பதி பிறந்த குழந்தையுடன் ராணியாருக்கு வீடியோ அழைப்பு செய்ததாக நண்பர் ஒருவர் வெளியிட்ட தகவலுக்கு பிரித்தானிய அரண்மனை மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், ஹரி- மேகன் தம்பதி மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு வீடியோ அழைப்பில் குழந்தை லிலிபெட்டை ராணியாருக்கு அறிமுகப்படுத்தியதாக தகவல் ஒன்று வெளியானது.
குழந்தையின் முகத்தை ராணியாருக்கு காண்பிக்க வேண்டும் என்பதில் அவர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்ததாகவும், மருத்துவமனையில் இருந்து இல்லத்திற்கு திரும்பியதும் ராணியாருக்கு வீடியோ அழைப்பு மேற்கொண்டதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் இச்சம்பவத்தை முற்றாக மறுத்துள்ள அரண்மனை ஊழியர் ஒருவர், இளவரசர் ஹரியின் நண்பர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை ஊடகங்களுக்கு வெளியிட்டு வருவது சிக்கலை ஏற்படுத்தும் என்றார்.
ராணியாரின் செல்லப் பெயரை, அவரது அனுமதி பெறாமல் ஹரி தமது மகளுக்கு சூட்டியது, அரண்மனை வட்டாரத்தில் இருந்து உரிய பதில் அளிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது வீடியோ அழைப்பு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உண்மையில் பெயர் விவகாரத்தில் ஹரி அனுமதி கோரவில்லை எனவும், தகவல் மட்டுமே ராணியாரிடம் தெரிவித்ததாகவும் அரண்மனை வட்டாரத்தில் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஆனால், இளவரசர் ஹரி பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர், தமது பிள்ளைக்கு பெயர் சூட்டுவது தொடர்பில் முதன் முதலில் ஹரி ராணியாரையே தொடர்பு கொண்டுள்ளார் என ஹரி தரப்பில் வாதிடப்படுகிறது.
மட்டுமின்றி, ராணியார் அப்போது மறுப்பு தெரிவித்திருந்தால், ஹரி தமது பிள்ளைக்கு வேறு பெயர் தெரிவு செய்திருப்பார். ராணியாருக்கும் இளவரசர் ஹரிக்கு இடையே சிக்கலை ஏற்படுத்தும் விவகாரத்தையே அரண்மனை வட்டாரங்கள் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.