பிரித்தானியாவில் விமானி வயிற்றைப் பிடித்துக்கொண்டு கழிவறைக்கு ஓடியதால் கலக்கமடைந்த பயணிகள்: அந்த திக் திக் நிமிடங்கள்
பிரித்தானியாவில் விமானம் ஒன்று தரையிறங்கும் நேரத்தில் விமானி வயிற்றைப் பிடித்துக்கொண்டு கழிவறைக்கு ஓடியதால் மக்கள் கலக்கம் அடைந்தனர்.
நேற்று அதிகாலை, கிரீஸ் தீவுகளில் ஒன்றான Crete தீவின் தலைநகரான Heraklionஇலிருந்து, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பர்க் நோக்கி ஒரு விமானம் வந்துகொண்டிருந்திருக்கிறது.
அப்போது திடீரென விமானத்தின் விமானிக்கு வயிற்றைக் கலக்க, அவர் கழிவறைக்கு ஓட, அதைக் கண்ட பயணிகள் கலக்கமடைய, உடனடியாக அவரது சக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்க, விமான ஓடுபாதைக்கு ஐந்து தீயணைப்பு வாகனங்களும் இரண்டு ஆம்புலன்ஸ்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும், விமானத்தின் இரண்டாவது விமானி பொறுப்பிலிருக்கும் விமானி, விமானத்தை சாமர்த்தியமாக, பத்திரமாக தரையிறக்கிவிட்டார்.
விமானி கழிவறைக்கு ஓடுவதைக் கண்டு பயணிகள் கலக்கமடைந்த நிலையில், விமானம் அவசரமாக தரையிறக்கப்படுவதாக சக விமானி அறிவிக்க, விமானியை விட பயணிகளுக்கு அதிகம் வயிற்றைக் கலக்கியிருக்கிறது, பயத்தில்...
இதற்கிடையில், விமானம் தரையிறங்கிய பிறகும் விமானி கழிவறையை விட்டு வெளியே வரவில்லை என்றும், அவசர உதவிக்குழுவினர் அவசரமாக விமானத்திற்குள் நுழைந்ததைக் கண்டதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், அதிக அனுபவமில்லாவிட்டாலும், மிகவும் இளைஞரான அந்த சக விமானி, முதன்மை விமானி இல்லாமலே சாமர்த்தியமாக விமானத்தைத் தரையிறக்கியதில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.