பிரித்தானியர்களுக்கு 3-வது டோஸ் கொரோனா தடுப்பூசி! வெளியான முக்கிய தகவல்கள்
பிரித்தானியாவில் 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு முன் கொரோனா தொற்றுநோயின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியில் பிரித்தானியா அரசு களமிறங்கவுள்ளது.
அதற்காக வரும் இலையுதிர் காலத்தில், நாட்டில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் 3-வது டோஸை வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த, தற்போது இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் விட்டி மேற்பார்வையில் 2 விதமான சோதனைகள் நடத்தப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல்களின்படி, முதல் வகை சோதனையில், புதிய உருமாறிய கொரோனா வைரஸ்களை கட்டுப்படுத்துவதற்கான புதிய தடுப்பூசிகள் 3-வது டோஸாக பயன்படுத்தப்படுகின்றன.
இரண்டாவது வகை சோதனையில், ஏற்கனவே வழங்கப்பட்டுவரும் ஃபைசர்-பயோஎன்டெக், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா அல்லது மாடர்னா தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.
மே 4 வெளியான அரசாங்க புள்ளிவிவரங்களின் படி, 67 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பிரித்தானியாவில் இதுவரை மொத்தம் 34.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.