லண்டனில் புலம்பெயர்ந்தோர் ஒருவரை பொலிசார் தாக்கியதால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்: பொலிசாருடன் மோதல்
கிழக்கு லண்டனில் புலம்பெயர்ந்தோர் ஒருவரைக் கைது செய்யும்போது பொலிசார் அவரது தலையில் ஐந்து முறை தாக்கியுள்ளனர்.
அதைக் கண்டு கோபமடைந்த மக்கள் பொலிசாரைத் தடுக்க முயன்றுள்ளனர். அதனால் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது.
இந்த செய்தி விரைவாகப் பரவ, குறுகிய நேரத்துக்குள் பெருமளவில் மக்கள் அங்கு திரண்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு சுமார் 7.00 மணியளவில் Dalston என்ற இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் பொலிசார் பலர் தாக்கப்பட்டதாகவும், பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வேறொரு காரணத்துக்காக தாங்கள் அந்த இடத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, தற்செயலாக புலம்பெயர்தல் குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த ஒருவர் சிக்கியதாக தெரிவித்துள்ள பொலிசார், அவரைக் கைது செய்ய முயலும்போதுதான் பொதுமக்கள் திரண்டு அவரைக் கைது செய்ய விடாமல் தடுத்ததாக பொலிசார் கூறுகின்றார்கள்.
உடனடியாக, அந்த இடத்தில் புலம்பெயர்தல் ரெய்டு நடப்பதாகவும், சம்பவ இடத்துக்கு விரைந்து வருமாறும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பட்டதாகவும் பொலிசார் தெரிவிக்கிறார்கள்.
சமூக ஊடகங்களில் பரப்பபடும் வீடியோக்கள், அங்கு என்ன நடந்தது என்பதை முழுமையாகக் காட்டுவதில்லை என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டுமென தாங்கள் வலியுறுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த மோதலைத் தொடர்ந்து 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த புலம்பெயர்ந்தோர் தாக்கப்பட்டதைக் காட்டும் வீடியோ குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.