கைது செய்யப்பட்ட இந்தியர்களுக்கு ஆதரவாக திரண்ட ஸ்காட்லாந்து மக்கள்... பிரித்தானியாவில் இதுவரை நடந்திராத ஒரு எழுச்சி சம்பவம்
உள்துறை அமைச்சகத்தின் உத்தரவையடுத்து கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவருக்காக ஸ்காட்லாந்து மக்கள் கொதித்தெழுந்த ஒரு நம்ப முடியாத சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றது.
ஸ்காட்லாந்தில், இந்தியர்களான Lakhvir Singh மற்றும் Sumit Sehdevi ஆகியோர் வாழும் கிளாஸ்கோவில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நேற்று திபுதிபுவென நுழைந்த பொலிசார், அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்கள் வாழிட உரிமம் இல்லாமல் அங்கு பத்தாண்டுகளாக வாழ்ந்துவந்துள்ளனர்.
சமீபத்தில்தான், முறையான ஆவணங்களின்றி பிரித்தானியாவில் வாழும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என உள்துறைச் செயலர் பிரீத்தி படேல் தெரிவித்திருந்த நிலையில், இந்த கைது சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆனால், அடுத்து நடந்ததை நிச்சயம் பொலிசார் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு typical இந்திய திரைப்படத்தில் வரும் காட்சியைப்போல, அங்கிருந்த மக்கள் உடனே இந்த தகவலை மற்றவர்களுக்கு பரப்ப, உடனடியாக அந்த பகுதியில் வாழும் 200க்கும் மேற்பட்டவர்கள் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அதற்குள் பொலிசார் Lakhvir Singhஐயும் Sumitஐயும் கைது செய்து வேன் ஒன்றில் ஏற்றி விட்டார்கள்.
ஆனால், அவர்கள் அங்கிருந்து நகர முடியாதபடி மக்களில் அந்த வேனை சூழ்ந்துகொள்ள, சிலர், வேனுக்கு அடியிலேயும் சென்று படுத்துக் கொண்டுள்ளார்கள். எங்கள் அயலகத்தாரை விட்டு விடு, பொலிசே திரும்பிப்போ என முழக்கமிட்டபடி மக்கள் வேனைச் சூழந்துகொள்ள, பொலிசார் திகைத்துப் போயிருக்கிறார்கள். காலை 10 மணிக்கு பொலிசார் Lakhvir Singhஐயும் Sumitஐயும் கைது செய்த நிலையில், நாள் முழுவதும் ஒருவரும் அங்கிருந்து நகரவில்லை.
மாலை 5 மணிக்கு வேறு வழியில்லாமல் பொலிசார் Lakhvir Singhஐயும் Sumitஐயும் விடுவித்துவிட்டார்கள். உடனே மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, கிட்டத்தட்ட தமிழ் சினிமா ஒன்றில் வருவது போலவே கைகளை உயர்த்தி மக்களுக்கு வணக்கம் செலுத்தியபடி பொலிஸ் வேனிலிருந்து Lakhvir Singh இறங்க, அவரது பின்னாலேயே இறங்கினார் Sumitம்... தங்களுக்கு ஆதரவாகக் கூடிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட Lakhvir Singh, என்னை பொலிசார் கைது செய்தபோது, காவல் முகாமில் கொண்டு போய் என்னை என்ன செய்வார்களோ என பயந்துபோனேன்.
ஆனால், கிளாஸ்கோ மக்கள் காட்டிய ஆதரவு என்னை உண்மையாகவே வியப்பிலாழ்த்திவிட்டது... உங்களுடைய ஆதரவுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என நெகிழ்ந்தார் Lakhvir Singh.
Lakhvir Singhம் Sumitம், அப்பகுதியின் சீக்கிய இன மக்களிடையே பிரபலமானவர்களாம், மட்டுமின்றி, இருவரும் வீடற்றவர்களுக்கு உணவளிக்கும் குணம் கொண்டவர்கள் என்பதால் அவர்களை அப்பகுதி மக்கள் நன்கறிந்து வைத்துள்ளார்கள்.
தர்மம் தலை காக்கும் என்றொரு சொல் வழக்கு உண்டு, உண்மையாகவே அது Lakhvir Singh மற்றும் Sumit விடயத்தில் உண்மையாகியுள்ளது.
இனம், மொழி, நிறம் என நாடுகள் பிளவுபட்டுக் கிடக்கும் இந்தக் காலத்தில், முறையான ஆவணங்கள் கூட இல்லாமல் வாழும் அந்த இருவருக்கும் பிரித்தானியர்கள் காட்டிய பெரும் ஆதரவு உண்மையாகவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.