உடலநலக்குறைவு காரணமாக பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் பேரறிவாளன் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு, தமிழக அரசு கடந்த மே மாதம் 30 நாட்கள் பரோல் வழங்கியது.
இதைத்தொடர்ந்து, கடந்த மே மாதம் 28-ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பேரறிவாளன் வந்தார்.
வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார்.
இதனையடுத்து, ஜூன் மற்றும் ஜூலை மாதம் என தொடர்ந்து இரண்டு முறை மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், பரோலில் உள்ள பேரறிவாளன் சிறுநீரக கோளாறு காரணமாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேரறிவாளன் சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனைக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.