இதைச் செய்தவர்கள் 'டெல்டா' வைரஸை கண்டு பயப்பட தேவையில்லை!
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலையை தவிர்த்துவிடலாம் என இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை கூறியுள்ளது.
பிரித்தானியாவில் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்ட 14,019 பேரைக் கொண்டு பொது சுகாதார இங்கிலாந்து (PHE) ஒரு ஆய்வை மேற்கொண்டது. அவர்கள் மீது அஸ்ட்ராஜெனேகா மற்றும் ஃபைசர் ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டன.
இந்த ஆய்வின் முடிவில், இந்த இரண்டு நிறுவன தடுப்பூசிகளை போடுவதன்மூலம் டெல்டா வகை வைரஸுக்கு எதிராக அதிக பாதுகாப்பை அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்ட 14,019 பேரில், 166 பேருக்கு மட்டுமே மருத்துவமனை சிகிச்சை சேவைப்பட்டது. மற்ற யாரும் அதிக அளவில் பாதிக்கப்படவில்லை. அவர்கள் மருத்துவமனைக்கே செல்ல வேண்டியதில்லை. ஏப்ரல் 12 முதல் ஜூன் 4 வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலையை 96 சதவீதம் நோயாளிகளுக்கு தடுத்து விடுவதாகவும்,
அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசி போட்டுக் கொண்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலையை 92 சதவீதம் நோயாளிகளுக்கு தடுத்து விடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், பிரித்தானியாவில் அதிகமாக பரவி வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.