இந்தியாவில் நாளை மருந்து கடைகள் இயங்காது - என்ன காரணம்?
இந்தியாவில் நாளை மருந்தகங்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.
மருந்துகடைகள் இயங்காது
கொரோனா காலத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுவதற்கு மத்திய அரசு தற்காலிக அனுமதி வழங்கியது.

ஆனால், தற்போது இந்த அனுமதி தொடரும் நிலையில், முறையான மருந்துச் சீட்டு மற்றும் சரிபார்ப்பு இன்றி ஆன்லைனில் மருந்துகள் விற்கப்படுவதாகவும், மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணிகள், தூக்க மருந்துகள், மற்றும் கருக்கலைப்பு மருந்துகள் எளிதாகக் கிடைப்பதாக குற்றம்சாட்டு உள்ளது.
AI மூலம் போலியான மருத்துவர் பரிந்துரை சீட்டுகளை உருவாக்கி அதன் மூலம், மருந்துகளை பெற்றுக்கொள்கின்றனர்.
மேலும், கார்ப்ரேட் ஆன்லைன் மருந்தகங்கள் வழங்கும் அதிக தள்ளுபடிகள் காரணமாக, உள்ளூர் சிறு மருந்தகங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
எனவே கொரோனா காலத்தில் தற்காலிகமாக கொண்டு வரப்பட்ட e-pharmacy செயல்பாட்டுக்கான அரசாணையை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அகில இந்திய மருந்தாளுநர்கள் மற்றும் மருந்து விற்பனையாளர்கள் அமைப்பு (AIOCD) வலியுறுத்தி உள்ளது.
இதனை கண்டித்து நாளை ஒரு நாள்(20.05.2026) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக AIOCD அறிவித்துள்ளது.

இதில், நாடு முழுவதும் உள்ள 12.5 லட்சத்திற்கும் அதிகமான மருந்தகங்கள் நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கூறப்படுகிறது.
இதில், தமிழ்நாட்டில் சுமார் 35,000 மருந்தகங்கள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
வேலைநிறுத்தத்தால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், அனைத்து அத்தியாவசிய மருந்துகளும் போதிய இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் என மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குநர் குருபாரதி, மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இந்த சுற்றறிக்கையில், மாவட்ட வாரியாக உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மருந்துகள் இல்லை எனில் அதில் புகாரளிக்கலாம்.

மாநில மருந்து கட்டுப்பாட்டு இணையப் பக்கத்தில் உள்ள தொடர்பு எண்களை அழைத்து சம்பந்தப்பட்ட மாவட்ட உதவி மைய எண்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்ட வாரியாக அத்தியாவசிய மருந்து இருப்பு விவரங்களை அரசுக்கு தெரியப்படுத்துதல் அவசியம். பல்வேறு இடங்களில் செயல்படும் பெருநிறுவன மருந்தகங்களும், மருத்துவமனையில் உள்ள மருந்தகங்களும் இயங்குவதை உறுதிபடுத்த வேண்டும்.
அதேபோன்று, மருத்துவமனை மருந்தகங்களில், வெளியிலிருந்து கொண்டுவரப்படும் பரிந்துரைச் சீட்டின் பேரில் மருந்துகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |