மூளைச்சாவு அடைந்த நபருக்கு பன்றியின் சிறுநீரகங்களை வெற்றிகரமாக பொருத்திய மருத்துவர்கள்: பல நோயாளிகளின் வாழ்வை மாற்றப்போகும் செய்தி
மூளைச்சாவு அடைந்த ஒருவரது உடலில், பன்றியின் சிறுநீரகங்களைப் பொருத்தி, அவை செயல்படுவதையும் கண்டறிந்துள்ளார்கள் அமெரிக்க மருத்துவர்கள்.
அலபாமாவைச் சேர்ந்த Jim Parsons (57) என்பவர், மோட்டர் சைக்கிள் பந்தயம் ஒன்றின்போது விபத்தில் சிக்கி, தலையில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்துள்ளார். அவருக்கு கருவிகள் உதவியுடன் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் அவரது குடும்பத்தினரிடம் ஒரு உதவி கோரியுள்ளார்கள்.
அது என்னவென்றால், அவரது உடலில் பன்றியின் சிறுநீரகங்களைப் பொருத்தி அவை வேலை செய்கிறதா என ஆராய்வதற்காக அவர்கள் அனுமதி கேட்க, Jimஉடைய குடும்பத்தினரும் அதற்கு அனுமதியளித்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, மரபணு மாற்ற முறையில் வளர்க்கப்பட்ட பன்றி ஒன்றின் சிறுநீரகங்கள் அவரது உடலில் பொருத்தப்பட்டுள்ளன.
சமீபத்தில், David Bennett என்பவருக்கு பன்றியின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டிருந்தது.
அதேபோல், Jimஉடைய உடலில் அந்த பன்றியின் சிறுநீரகங்கள் பொருத்தப்பட, அவை மூன்று நாட்களுக்கு ஒழுங்காக வேலை செய்ததைக் கண்டறிந்துள்ளார்கள் மருத்துவர்கள்.
இந்த கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
ஏனென்றால், உலகம் முழுவதும் ஏராளம் சிறுநீரக நோயாளிகள், சிறுநீரக தானத்துக்காக காத்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் நிலையில், மனித உடலில் பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் வேலை செய்யுமானால், அந்த நோயாளிகளுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாக இருக்கும்.