ஊர்வலம் நடுவே வாகனத்துடன் பாய்ந்த நபர்... சிதறி ஓடிய மக்கள்: ரத்தக்களரியான சம்பவம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் தன்பாலின ஈர்ப்பு மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலத்தில், வாகனம் ஒன்றுடன் பாய்ந்து தாக்கிய நபரால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
லாடர்டேல் கோட்டைக்கு வடக்கே 10 மைல் தொலைவில் உள்ள வில்டன் மேனர்ஸில் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு இந்த பகீர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வாகனத்தை மோதவிட்ட நபர், ஊர்வலம் தொடங்கும் வரையில் அப்பகுதியிலேயே காத்திருந்து, தாக்குதலில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால், அந்த நபர் வேண்டுமென்றே தாக்குதலில் ஈடுபட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை என்று பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபரும் தன்பாலின ஈர்ப்பாளர் என்றே கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் ஒருவர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்டதுடன், இருவர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், தவறுதலாக வாகனத்தின் வேகத்தை அதிகரித்ததாகவும், ஆனால் கட்டுப்பாட்டில் நிற்காமல் வாகனம் ஊர்வலத்தில் கலந்து கொண்ட மக்கள் மீது பாய்ந்ததாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
நகர காவல்துறையும் இது ஒரு விபத்து என்றே விசாரணைக்கு பின்னர் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஊர்வலத்தில் பங்கேற்ற பலர் இது ஒரு திட்டமிட்ட செயல் என்றே குறிப்பிட்டுள்ளனர்.