பரபரப்பான M8 சாலையில் பதறவைக்கும் சம்பவம்: இந்திய வம்சாவளி இளைஞர் உட்பட மூவரின் புகைப்படம் வெளியானது
ஸ்கொட்லாந்தின் பரபரப்பான M8 சாலையில் நடந்த பதறவைக்கும் விபத்தில் இந்திய வம்சாவளி இளைஞர் உட்பட மூவர் கொல்லப்பட்டதுடன் ஐவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளாஸ்கோவின் மேற்கில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் M8 சாலையின் மேற்கு திசையில் குறித்த கோர விபத்து நடந்துள்ளது. இதில் டேவிட் பேடன்(27), மன்வீர் பென்னிங்(27), மற்றும் மார்க் டவுனி(31) ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளதுடன், தற்போது இவர்கள் மூவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ள எஞ்சிய ஐவரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ஐவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 35 வயது நபர் கைது செய்யப்பட்டு, போக்குவரத்து குற்றங்களில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கப்படுவதாக ஸ்கொட்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கோர விபத்தில் மரணமடைந்துள்ள மூவர் தொடர்பில் அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மட்டுமின்றி, இந்த விபத்தால் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக போக்குவரத்து பொலிசார் சார்பில் இன்ஸ்பெக்டர் டேரன் குக் குறிப்பிட்டுள்ளார்.