ஆப்கன் மக்களை மீட்கும் திட்டம்... இதற்காகத்தான் காத்திருக்கிறோம்: ஜேர்மனி அறிவிப்பு
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஒரு புதிய அரசை உருவாக்க விரும்புகிறார்கள். அதற்குப் பிறகுதான் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்புவோரை வெளியேற்றுவது தொடர்பாக தாலிபான்களுடன் பேச முடியும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்.
ஆகவே, தாலிபான்கள் அரசை அமைப்பதற்காகத்தான் காத்திருக்கிறோம், அவர்கள் அரசு அமைத்த பிறகு, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்புவோரை வெளியேற அனுமதிப்பது தொடர்பில் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றுவார்களா என்பதை பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார் ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas.
தாலிபான்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள், ஆனால், அவர்கள் வரும் நாட்களில் தாங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்களா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
இப்போது தாலிபான்கள் அரசு ஒன்றை புதிதாக அமைக்க விரும்புகிறார்கள். நமது கோரிக்கையை அவர்கள் ஏற்பார்களா என்பதை அதிலிருந்துதான் அறிந்துகொள்ளமுடியும் என்று கூறியுள்ளார் அவர். ஜேர்மன் குடிமக்கள், அவர்களுக்கு உதவிய உள்ளூர் அலுவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோருக்கு ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் ஆபத்து இருப்பதாக ஜேர்மனி கணக்கிட்டுள்ளது.
அவர்களை எப்படியாவது ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, காபூல் விமான நிலையம் திறந்திருந்தால் அங்கிருந்து மக்களை விமானம் மூலம் மீட்பது, அல்லது பக்கத்து நாடுகளுக்கு அவர்களை அனுப்புவது என திட்டமிட்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக துருக்கி, உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துவரும் அவர், பாகிஸ்தானில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசியபோது இந்த தகவலை வெளியிட்டார்.