பிரித்தானியாவில் புயலால் சறுக்கிச் சென்று புல்வெளியில் இறங்கிய விமானம்: தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்
பிரித்தானியாவை புரட்டிப் போட்டுள்ள புயல் ஒன்றில் சிக்கிய விமானம் ஒன்று, தரையிறங்கும்போது, ஓடுபாதையிலிருந்து சறுக்கிச் சென்று புல்வெளியில் இறங்கியுள்ளதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரித்தானியாவை புரட்டிப் போட்டுள்ள புயல்
பிரித்தானியாவை Babet என்னும் புயல் துவம்சம் செய்துவருகிறது. புயலுக்கு மூன்று பேர் பலியாகியுள்ள நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், சுமார் 4,000 வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.
வெளியாகிவரும் காட்சிகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதையும், சில இடங்களில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்து கிடப்பதையும் காட்டி அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
ஓடுபாதையிலிருந்து சறுக்கிச் சென்று புல்வெளியில் இறங்கிய விமானம்
இந்நிலையில் கிரீஸ் தீவுகளில் ஒன்றான Corfu தீவிலிருந்து பிரித்தானியாவின் Leeds Bradford விமான நிலையத்துக்கு வந்த விமானம் ஒன்று, பலத்த காற்றின் நடுவே தரையிறங்கியுள்ளது.
அப்போது, ஓடுபாதையிலிருந்து சறுக்கிச் சென்ற அந்த விமானம், புல்வெளியில் சென்று நின்றுள்ளது. விமானத்திலிருந்த பயணிகள் சிலர், தங்கள் வாழ்வு முடியப்போகிறது என்ற முடிவுக்கே வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
விமானத்தில் சுமார் 100 பயணிகள் இருந்ததாக கூறப்படும் நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |