24 பயணிகளை ஏற்றாமலே புறப்பட்ட விமானம்: ஒரு எச்சரிக்கை செய்தி?
பிரான்சிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்று, 24 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமலே புறப்பட்டுச் சென்றுள்ளது.
ஒரு எச்சரிக்கை செய்தி?
மார்ச் மாதம் 11ஆம் திகதி, பிரான்சிலுள்ள Tours என்னுமிடத்திலிருந்து மொராக்கோ நாட்டிலுள்ள Marrakesh என்னுமிடம் நோக்கிப் புறப்பட்ட Ryanair நிறுவன விமானம் ஒன்று, 24 பயணிகளை ஏற்றிக்கொள்ளாமலே புறப்பட்டுச் சென்றுள்ளது.

விடயம் என்னவென்றால், Entry/Exit System (EES) திட்டம் என்னும் திட்டத்தின் கீழ், ஷெங்கன் பகுதிக்கும், ஷெங்கன் பகுதியிலிருந்தும் குறுகிய கால பயணத்துக்காக பயணிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மக்கள், தானியங்கி இயந்திரம் ஒன்றில் தங்கள் கைரேகை, புகைப்படம் (biometric data) போன்றவற்றை பதிவு செய்யவேண்டியிருக்கும் என 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ஆம் திகதி முதலே பல நாடுகள் அறிவித்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், பிரான்சிலுள்ள Tours விமான நிலையத்துக்கு திடீரென அதிகாரிகள் சோதனையிட வந்துள்ளார்கள்.
அத்துடன், EES திட்டத்தின்கீழ் பயணிகளுடைய கைரேகை, புகைப்படம் பதிவு செய்ய வெகு நேரமாகியுள்ளது.
சுமார் 42 நிமிடம் காத்திருந்த விமானி, பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, பொறுமையிழந்து, விமானத்தில் ஏற தாமதித்த 24 பயணிகளின் உடைமைகளையும் கீழே இறக்கிவைத்துவிட்டு விமானத்தை கிளப்பிவிட்டார்.

இந்த மாத இறுதியிலிருந்து EES திட்டத்தை முழு வீச்சில் அமுல்படுத்த உள்ளது பிரான்ஸ்.
EES திட்டம் குறித்த செய்திகள் வெளியாகத் துவங்கும்போதே, ஷெங்கன் பகுதிக்குச் செல்லும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள், EES திட்டம் அமுல்படுத்தப்பட்டால், எல்லைகளில் நீண்ட நேரம் காத்திருக்க நேரலாம் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது.
ஆக, பிரான்சிலிருந்து புறப்பட்ட விமானம் பயணிகளை விட்டு விட்டுச் சென்ற இந்த விடயம், EES திட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும்போது, இதேபோன்ற நிலை பல்வேறு நாட்டினருக்கும் ஏற்படலாம் என எச்சரிக்கும் ஒரு செய்தியாக அமைந்துள்ளது எனலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |