கொடுமைகள் அனுபவித்தனர்... பிரித்தானியாவிடம் பல பில்லியன் இழப்பீடு கேட்கும் பிரபல நாடு
அட்லாண்டிக் அடிமை வர்த்தகம் தொடர்பாக பிரித்தானியாவிடம் இருந்து பில்லியன்களை இழப்பீடு பெற ஜமைக்கா திட்டமிட்டுள்ளது என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்த ஜமைக்காவின் தற்போதைய அமைச்சர்கள் குழு இந்த விவகாரம் தொடர்பில் அவர்களின் மனுவை அறிவித்ததுடன் நிவாரணம் காலதாமதமாவதாகவும் தெரிவித்துள்ளனர்.
17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கரீபியன் தீவுகளில் உள்ள தோட்டங்களில் பணியாற்ற, முதலில் ஸ்பெயின் பின்னர் பிரித்தானியா ஆகிய நாடுகள் சுமார் 600,000 ஆபிரிக்கர்களை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்துள்ளது.
அவர்கள் அறுவடை செய்த கரும்பு, வாழைப்பழங்கள் மற்றும் பிற பயிர்கள் அவர்களின் உரிமையாளர்களுக்கு செல்வத்தை உருவாக்கியது, அதே நேரத்தில் தோட்டங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் மனிதர்களாகவே மதிக்கப்படவில்லை.
இந்த நிலையிலேயே, ஜமைக்காவின் கலாச்சார அமைச்சர் Olivia Grange, எங்கள் முன்னோர்கள் அனுபவித்த வலிகளை ஈடுசெய்ய பிரித்தானியாவிடம் இருந்து இழப்பீட்டு நீதியை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானிய பேரரசின் நலனுக்காக உழைக்க கட்டாயப்படுத்தப்பட்டதுடன், இதன்பேரில் அவர்கள் இணையற்ற அட்டூழியங்களையும் அனுபவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, அடிமைகளை வாங்கிய உரிமையாளர்களுக்கு அதன் விலையை அளிப்பதற்காக ஜமைக்கா அரசாங்கம் அப்போது 20 மில்லியன் பவுண்டுகள் கடனான பெற்றது.
அந்த கடனை 2015ல் தான் ஜமைக்கா முழுமையாக செலுத்தி முடித்தது. இன்றைய மதிப்பில் அது 7.6 பில்லியன் பவுண்டுகள் என கணக்கிட்டுள்ள ஜமைக்கன் எம்.பி. மைக் ஹென்றி, அதை பிரித்தானியா தங்களுக்கு அளிக்க வேண்டும் எனவும் பாராளுமன்றத்தில் பிரேரணையாக முன்வைத்துள்ளார்.
ஜமைக்கா பாரளுமன்றத்தில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால், அடுத்தகட்டமாக பிரித்தானிய ராணியாரிடம் அதை சமர்ப்பிக்க உள்ளனர்.
1807ல் பிரித்தானியா அடிமை வர்த்தகத்தை தடைசெய்தது. மட்டுமின்றி 1834ல் அடிமைகளை வைத்திருப்பதை முறையாக தடைசெய்தது குறிப்பிடத்தக்கது.