EURO 2020: ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த இங்கி. vs ஸ்காட். போட்டி; கலவரத்தில் ஈடுபட்ட 26 பேர் கைது
லண்டனில் நேற்று இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து இடையேயான கால்பந்து போட்டி முடிவடைந்த பிறகு ஏற்பட்ட கலவரத்தில் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் இடையேயான யூரோ 2020 கால்பந்து லீக் போட்டி லண்டன் வெம்பிளி விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்காமல், 0-0 என்ற ஸ்கோர் கணக்குடன் போட்டி முடிவடைந்தது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி இரு அணிகளின் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இதனைத் தொடர்ந்து, போட்டி முடிந்து அரங்கத்திலிருந்து வெளியே வந்த இரு அணிகளின் ரசிகர்களிடையியே கலவரம் ஏற்பட்டது.
அப்போது ஸ்காட்லாந்து ரசிகர்கள், அவர்களுடைய கொடிகளை உயர்த்தி, ஸ்காட்லாந்து தேசிய கீதத்தை பாடியுள்ளனர், மேலும் “No Scotland, no party” என கோஷமிட்டுள்ளனர். இதனால் ரசிகர்களிடையே கைகலப்பு ஏற்பட்டது.
கலவரத்தை தடுக்க மெட்ரோபொலிட்டன் பொலிஸார் அதிகாலை 12.45 மணியளவில் லெய்செஸ்டர் சதுக்கத்திற்குள் நுழைந்தனர். கலவரத்தை கட்டுப்படுத்தி அரை மணிநேரத்தில் கூட்டத்தை கலைத்து வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தில் பொலிஸார் உட்பட பலருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதற்கிடையில், குடித்துவிட்டு ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை வைத்திருந்த, இனரீதியான தாக்குதலில் ஈடுப்பட்ட மற்றும் பொலிஸை தாக்கிய குற்றங்களுக்காக 26 பேரை மெட் பொலிஸார் கைது செய்தனர்.