ஐநா தலைமையகத்தில் துப்பாக்கியுடன் மிரட்டிய நபர் கைது: அமெரிக்காவில் பரபரப்பு சம்பவம்
அமெரிக்காவில் ஐ.நா. தலைமையகத்திற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது கழுத்தில் துப்பாக்கி வைத்தபடி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையக வாசலில் அந்த நபர், தனது கழுத்துக்குக் கீழே ஒரு ஷாட்கன் துப்பாக்கியை வைத்தபடி, தனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
அறிக்கைகளின்படி, அந்த நபர் சிவப்பு நிற ஸ்வெட்டர் மற்றும் பழுப்பு நிற ஜாக்கெட் அணிந்த நரைத்த முடியுடன் நடுத்தர வயதுடைய வெள்ளை ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PHOTO: REUTERS
தன்னிடம் உள்ள சில ஆவணங்களை ஐ.நா.வுக்கு வழங்க விரும்புவதாக கூறிய அந்த நபர், அதனை ஏற்காவிட்டால் தன்னைத் தானே சுட்டுக்கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
சுமார் இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த நபரை நியூயார்க் நகர் பொலிஸார் கைது செய்தனர்.
NYPD-ன் சிறப்பு நடவடிக்கைகளின் தலைவர் ஹாரி வெடின், "இது பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாகத் தெரியவில்லை என்பதை நாங்கள் முன்பே அறிந்தோம்.
அவரது கோரிக்கையை நாங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வது மற்றும் சம்பவத்தை அமைதியான முடிவுக்கு கொண்டு வருவது குறித்து உரையாடல் முன்னும் பின்னுமாக சென்றது," என்று அவர் கூறினார்.
சமாதானத்திற்குப் பிறகு அவர் தனது துப்பாக்கியை கீழே இறக்கிய பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக பொலிஸார் அவரை கைது செய்தனர்.
Photo: EPA
பின்னர், அவசரகால சேவைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அவரிடமிருந்த ஆவணங்களைக் கைப்பற்றி, அவற்றை ஐ.நா.விடம் ஒப்படைத்தனர்.
அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் பரிசோதனைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த ஆவணங்களில் என்ன இருக்கிறது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவத்தின்போது, நடைபாதையில் நிற்கும் அந்த நபரை ஆயுதமேந்திய பொலிஸார் சுற்றி வளைப்பதைக் காட்டிய படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.