ஜேர்மனியில் வெளிநாட்டவர் மீது பொலிசார் தாக்குதலுக்கு கண்டனம்
ஜேர்மனியில் தன் நாட்டவர் ஒருவர் இன ரீதியாக தாக்கப்பட்டதற்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜேர்மனியின் பிராங்க்பர்ட்டில் துருக்கி நாட்டவர் ஒருவர் இம்மாதம் 16ஆம் திகதி பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு துருக்கியின் ஆளும் கட்சி செய்தித்தொடர்பாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அது ஒரு இனரீதியான தாக்குதல் என்றும் விமர்சித்துள்ள்ளார்.
AKP கட்சியின் செய்தித்தொடர்பாளரான Ömer Çelik, இது ஒரு இனரீதியான பாசிஸ தாக்குதல், இதில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையெல்லாம் எதுவும் இல்லை என்று கூறி, தங்கள் நாட்டவர் தாக்கப்படும் வீடியோவையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பிராங்க்பர்ட்டில் மன நலம் பாதிக்கப்பட்ட Selim Çiftçi (35) என்னும் துருக்கி நாட்டவர், நடு ரோட்டில் வைத்து முரட்டுத்தனமாக தாக்கப்படும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
பொலிசார் தாக்கியதால் தன் சகோதரனுடைய சிறுநீரகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக Selimஉடைய சகோதரி தெரிவித்துள்ளார்.
துருக்கி தகவல் தொடர்பு இயக்குநரான Fahrettin Altun என்பவரும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளதோடு, அந்த வீடியோ மனசாட்சி உள்ள மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் எவரையும் பதறவைக்கும் என்றும், ஐரோப்பாவில் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு அதிகரித்துவருவதையும் அது காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
துருக்கியின் துணை வெளியுறவு அமைச்சரும் இந்த தாக்குதலை கண்டித்துள்ளதோடு,
இந்த சம்பவம் குறித்து அனைத்து மட்டங்களிலும் உள்ள அதிகாரிகளும் கவனம் செலுத்த
உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.