பக்கத்து நாட்டுடனான எல்லைகள் சில மூடப்படலாம்: சுவிஸ் மாகாணமொன்று அறிவிப்பு
பிரான்சுடனான சில எல்லைகள் அடுத்த மாதம் மூடப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாண பொலிஸ் துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
எல்லைகள் சில மூடப்படும்
அடுத்த மாதம், அதாவது, ஜூன் மாதம், பிரான்சிலுள்ள Évian என்னுமிடத்தில் G7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
விடயம் என்னவென்றால், 2003ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Évianஇல் G8 உச்சி மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு முந்தைய இரவு, உலகமயமாக்கலுக்கு எதிரான அமைப்பொன்றைச் சேர்ந்த சிலர் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள்.

ஆர்ப்பாட்டமாக துவங்கிய விடயம், சூறையாடலில் முடிந்தது. ஆடம்பர பொருட்கள் விற்பனை நிலையங்கள், கடைகள் என அனைத்தையும் நொறுக்கிய ஒரு கூட்டம் பொருட்களை சூறையாடியது.
அப்போது நிகழ்ந்த வன்முறை, சூறையாடலால் ஏற்பட்ட இழப்பு ஆகியவற்றின் காயம் மனதளவில் இன்னமும் பலருக்கும் ஆறவில்லை.
ஆகவே, இம்முறையும் அதேபோல் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெனீவாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான சில எல்லைகள் மூடப்படலாம் என ஜெனீவா பொலிஸ் துறைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |