விவேக் மரணம் குறித்து அதிர்ச்சி தரும் வகையில் பேசி சர்ச்சையை கிளப்பிய மன்சூர் அலிகான்! பொலிசில் புகார்
விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், சும்மா இருந்த நடிகனை (விவேக்) கொரோனா ஊசியை போட்டு படுக்க வைத்து விட்டீர்கள், என் இரத்தம் கொதிக்கிறது.
கொரோனா எங்க இருக்கு. டெஸ்ட் தப்பா பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மாத்திரை தப்பா கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா இருக்கு என்று சொல்றீங்களா. அப்படி என்றால் அனைவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள்.
இல்லையென்றால் கொரோனாவே இல்லை என்று அறிவியுங்கள். உடல்நிலை சரியில்லாமல் இருந்தால்தான் ஊசி போடணும். நல்லா இருக்கிறவர்களுக்கு எதற்கு ஊசி. அப்படி ஊசி போடணும் என்றால் இன்ஸ்சூரன்ஸ் கொடுங்கள். 100 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் கொடுங்கள்.
அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள். பின்னர் ஏன் ஊசி போடுகிறீர்கள். பெருந்தொற்று, பெருந்தொற்று என்று சொல்கிறீர்கள்.
ஜெயலலிதா எதிர்கொள்ளவில்லையா? டெங்கு காய்ச்சல் வரலையா? நிலவேம்பு கசாயம் கொடுக்கவில்லையா? மூலிகையை டெவலப் செய்யுங்க. கசாயம் குடியுங்கள்.
செல்வாக்கு இழந்த அரசியல். செல்வாக்கு இழந்த தலைவர்கள். முற்றிலும் செல்லாக்காசா செல்வாக்கு இழந்த இந்த அரசாங்கம் கொரோனாவை கையில் பிடித்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என்றார் ஆவேசமாக.
இதை தொடர்ந்து விவேக் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் பாரத பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பின் செயலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்குக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், சுகாதாரத் துறை செயலாளர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்து இருக்கிறோம் என கூறியுள்ளார்.