50 மில்லியன் மக்களை கொல்ல போதுமானது... மீட்கப்பட்ட பொருள்: பெண் உட்பட இருவர் சிக்கினர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 20 கிலோ அளவுக்கு மிக ஆபத்தான போதை மருந்தினை அதிரடியாக மீட்டுள்ள பொலிசார் பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளனர்.
20 கிலோ அளவுக்கு மீட்கப்பட்ட மிக ஆபதானதாக கருதப்படும் அந்த போதை மருந்தால் 50 மில்லியன் மக்களை மிக சாதாரணமாக கொல்ல முடியும் என பொலிஸ் தர்ப்பு தெரிவித்துள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் இருந்தே, பதுக்கி வைக்கப்பட்டுள்ள அந்த ஆபத்தான போதை மருந்தை பொலிசார் மீட்டுள்ளனர். அத்துடன் 4 கிலோ அளவுக்கு கோகோயின் மற்றும் சுமார் 900 கிராம் அளவுக்கு ஹெராயின் போதை மருந்தும் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் 20 வயதான Andres Jesus Morales என்பவரும் 23 வயதான Christine Ponce என்பவரும் கைது செய்யப்பட்டு, நான்கு பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பகுதியில் இதுவரை மீட்கப்பட்ட போதை மருந்து விவகாரத்தில் இதுவே மிகப்பெரியது என கூறப்படுகிறது. Carfentanil போதை மருந்தானது நானோகிராம் அளவுக்கு பயன்படுத்தினாலே அது உயிருக்கு உலை வைத்துவிடும் என கூறும் பொலிசார்,
தற்போது மீட்கப்பட்ட 20 கிலோ என்பது, வேறு போதை மருந்துடன் கலந்து அளிக்கப்பட்டால் மொத்தமாக 50 மில்லியன் மக்களை கொல்ல போதுமானது என எச்சரித்துள்ளனர்.
குறித்த போதை மருந்தானது யானைகளை அமைதிப்படுத்த உருவாக்கப்பட்டதாகும், மனிதர்கள் பயன்பாட்டுக்கானது அல்ல. மட்டுமின்றி உரிய பாதுகாப்பின்றி அந்த போதை மருந்தை அணுகுவதும் உயிருக்கு ஆபத்தாகும்.
வேறு போதை மருந்துகளுடன் இதை கலந்து மக்கள் பயன்பாட்டுக்கு அளிப்பதும் மிக மிக ஆபத்தானது என அவசர உதவிக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.