4 பேர் மீது வாகனத்தை ஓட்டிய நபர்: பொதுமக்களுக்கு டொராண்டோ பொலிஸார் எச்சரிக்கை!
கனடாவில் நான்கு பேர் மீது காரை செலுத்தி காயப்படுத்திய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வாகன மோதல்
டொராண்டோ பெருநகரப் பல்கலைக்கழகத்தில் (TMU) செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தைத் தொடர்ந்து, 23 வயதுடைய ஒருவரை டொராண்டோ பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்த நபர் ஒரு வாகனத்தை வேண்டுமென்றே ஒரு குறிப்பிட்ட நபரை நோக்கி ஓட்டிச் சென்று தாக்கியதாகவும், ஆனால் எதிர்பாராத விதமாக நான்கு பேர் காயமடைந்ததாகவும் புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்
பொலிஸாரால் தேடப்படும் அந்த நபர் ரியான் பெட்ரோஃப்(Ryan Petroff) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் உடனடியாக பொலிஸில் சரணடையுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊடகங்களுக்கு பேசிய டொராண்டோ பொலிஸ் ஆய்வாளர் எர்ரோல் வாட்சன், பெட்ரோஃப் ஒரு குறிப்பிட்ட நபரை இலக்கு வைத்ததாக பொலிஸார் நம்புவதாகக் தெரிவித்தார்.
இருப்பினும், சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையிலான உறவு குறித்து மேலும் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
பெட்ரோஃபை அடையாளம் காண உதவும் வகையில் அவரது புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்கள் பெட்ரோஃபை ஆபத்தானவராக கருத வேண்டும் என்றும், அவரை யாராவது பார்த்தால் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அவரை நேரடியாக அணுக வேண்டாம் என்றும் ஆய்வாளர் வாட்சன் எச்சரித்தார்.
பெட்ரோஃப் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டி உடல் காயத்தை ஏற்படுத்தியது மற்றும் ஆயுதத்தால் தாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |