திடீரென வெடித்த ஃபிரிட்ஜ்! காப்பாற்றுங்கள் என அலறிய காவல் ஆய்வாளர்..பின்னர் நேர்ந்த பரிதாபம்
தமிழக மாவட்டம் கோவையில் ஃபிரிட்ஜ் வெடித்த விபத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் பெண்ணொருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்
திருப்பூரைச் சேர்ந்த சபரிநாத் (42) என்பவர் சென்னையில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்தமான வீடு ஒன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நல்லூரில் உள்ளது.
அதன் தரைத்தளத்தில் சாந்தி (37) என்ற பெண் வாடகைக்கு வசித்து வந்தார். சபரிநாத் அவ்வப்போது பொள்ளாச்சி வரும் சமயம் மேல்தளத்தை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் விடுப்பு எடுத்துக் கொண்டு நல்லூர் வந்த சபரிநாத், தனது வீட்டில் தங்கியிருந்தார்.
வெடித்த ஃபிரிட்ஜ்
நேற்று காலை அவரது வீட்டில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டதுடன், காப்பாற்றுங்கள் என்று இருவர் அலறுவதை கேட்டு அக்கப்பக்கத்தினர் பதறினர். அதனையடுத்து வீட்டிற்கு விரைந்த சிலர், கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் அதனை உடைத்து உள்ளே சென்றனர்.
சமையல் அறை முழுவதும் புகைமூட்டமாக இருந்ததால், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் உள்ளே இருந்த சபரிநாத் மற்றும் சாந்தியை மீட்டனர்.
பரிதாப பலி
ஆனால் துரதிர்ஷ்டவசமாக தீயில் கருகியதால் இருவரும் உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக ஃபிரிட்ஜ் வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஃபிரிட்ஜ் வெடித்த விபத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் பெண்ணொருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.