லண்டனில் புதருக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 45 வயது பெண்! ஆண் ஒருவரின் புகைப்படங்களை வெளியிட்ட பொலிஸ்.. முக்கிய தகவல்
லண்டனில் புதர்களுக்கு இடையே பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் அதில் தொடர்புடைய நபரின் சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்டு பொலிசார் முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர்.
கிழக்கு லண்டனின் ரோம்போர்டில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணியளவில் மரியா ஜேன் ராவ்லிங்ஸ் (45) என்ற பெண் அங்கிருந்த புதர்களுக்கு இடையே சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
மரியாவின் உடல்கூராய்வில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், தலையில் பலமாக தாக்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை. மரியா சாலையில் நடந்து சென்ற போது யாரோ அவரை அணுகியிருக்கக்கூடும் என பொலிசார் கருதுகின்றனர்.
இந்த நிலையில் பேருந்தில் பயணிக்கும் நபர் ஒருவரின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அந்த நபரிடம் கொலை தொடர்பில் தகவல் இருக்கும் எனவும், விசாரணைக்கு அவர் நன்கு உதவலாம் எனவும் பொலிசார் நம்புகின்றனர்.
குறித்த நபர் கடந்த புதன்கிழமை நள்ளிரவு டேகின்ஹாம் நோக்கி பேருந்தில் பயணிக்கும் போது பதிவான புகைப்படங்களே வெளியிடப்பட்டுள்ளது.
அவரை அடையாளம் காணும் பொதுமக்கள் உடனடியாக தங்களை தொடர்பு கொள்ளும்படி பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.