மேற்கு வங்கத்தில் மம்தா... தமிழகத்தில் திமுக! இந்த 2 கட்சியின் வெற்றிக்கான வியூகங்களை வகுத்து கொடுத்த இவரை தெரியுமா?
பிரபல அரசியல் ஆலோசகரான பிரஷாந்த் கிஷோர் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரபல அரசியல் ஆலோசனை நிறுவனமான ஐபேக்கை உருவாக்கியவர்களில் பிரஷாந்த் கிஷோரும் ஒருவர். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடிக்கும் பாஜகவிற்கு அரசியல் வியூகங்களை வகுத்து கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். அதன்பின் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பணியாற்றி நிதிஷ் குமாருடன் நெருக்கமாகி பின் அக்கட்சியிலும் இணைந்தார்.
அக்கட்சியின் துணை தலைவராக பிரஷாந்த் கிஷோர் பணியாற்றி வந்தார். பிரஷாந்த் கிஷோர் பல்வேறு கட்சிகளுக்கு இதற்கு முந்தைய காலங்களில் தேர்தல் வியூகங்களை வகுத்து அக்கட்சிகளை வெற்றிபெற வைத்துள்ளார்.
குறிப்பாக, பஞ்சாப்பில் காங்கிரசின் அமிரிந்தர் சிங், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி என்று பல மாநில முதல்வர்களின் வெற்றிக்கு பிரஷாந்த் கிஷோர்தான் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.
தற்போது நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலிலும் திமுக, திரிணாமுல் காங்கிரசின் வெற்றிக்கு இவர் தான் காரணமாக இருந்தார். இரண்டு கட்சிக்கும் இவரின் ஐபேக் நிறுவனம்தான் தேர்தல் ஆலோசனைகளை வழங்கி வியூகங்களை வகுத்து கொடுத்தது.
இந்நிலையில் இவர் திடீரென அரசியல் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றி பேசிய அவர், இனியும் இந்த அரசியல் ஆலோசனைகளை செய்ய விரும்பவில்லை.
இந்த தளத்தில் இருந்து வெளியேற நினைக்கிறேன். வேறு பணிகளை செய்ய விரும்புகிறேன். என் குடும்பத்தோடு நேரம் செலவிட விரும்புகிறேன். ஐபேக் நிறுவனத்தின் உறுப்பினர்கள் ஐபேக்கை நடத்தட்டும். நான் இங்கிருந்து வெளியேறுகிறேன் என்று கூறியுள்ளார்.
அரசியலில் இருந்து விலகியுள்ள இவர், இவர் அரசியல் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக திரிணாமுல் காங்கிரசில் உறுப்பினராக வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வருகின்றன.