நாளுக்கு நாள் அதிகரித்த நாத்தனார், மாமியாரின் குரூர செயல்! வயிற்றில் உள்ள குழந்தையுடன் சடலமான 22 வயது கர்ப்பிணி பெண்
புதுச்சேரியில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர், மாமியார், நாத்தனாரின் குரூர செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காரைக்காலை சேர்ந்தவர் பாரத் (27). இவரது மனைவி வினோதா (22). இருவரும் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது வினோதா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
கூலி வேலை செய்துவரும் பாரத், மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பெற்றோரிடம் வரதட்சணையாக நகை, பணம் வாங்கி வரும்படி வினோதாவை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.
இதற்கு பாரத்தின் தாயார் ஜோதி (42), நாத்தனார் பரிமளா (30) ஆகியோரும் உடந்தையாக இருந்து வயிற்றில் குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி என்றும் பாராமல் வினோதாவை கொடுமைப்படுத்தினர்.
நாளுக்கு நாள் கொடுமை அதிகரித்ததால் மனமுடைந்த வினோதா தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது வினோதா, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தெரியவந்ததும் வினோதாவின் தந்தை வெங்கடேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனே காவல் நிலையம் சென்று, வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதால் தனது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரளித்தார்.
அதன்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து பாரத், ஜோதி ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவான நாத்தனார் பரிமளாவை வலைவீசி தேடி வருகின்றனர்.