தாய் வீட்டுக்கு வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்! கிராம மக்கள் கண்ட அதிர்ச்சி காட்சி
இந்தியாவில் மது போதையில் கர்ப்பிணி மகளை தந்தை சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மாதையன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (60). இவரது மனைவி மாதேவி. இவர்களது மகள் வெங்கடலட்சுமி (21).
இவருக்கும் கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வெங்கடலட்சுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் யுகாதி பண்டிகை விருந்துக்காக வெங்கடலட்சுமி, தனது கணவர் சீனிவாசனுடன் நேற்று கரடிக்கல்லில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் சீனிவாசன் வெளியே சென்று விட்டார். அந்த நேரத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த அருணாச்சலம், தனது மனைவி மாதேவியுடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் மனைவியை தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட முயன்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள் வெங்கடலட்சுமி தனது தாயை காப்பாற்ற குறுக்கே சென்றார். அப்போது அருணாச்சலம் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வெங்கடலட்சுமி உடலில் குண்டுகள் பாய்ந்தன.
இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கிருந்து அருணாச்சலம் தப்பி ஓடிவிட்டார்.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு, கிராம மக்கள், அருணாச்சலம் வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது அங்கு குண்டுஅடிப்பட்டு வெங்கடலட்சுமி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் வெங்கடலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலைமறைவான அருணாசலத்தை தேடி வருகின்றனர்.