அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இறப்புக்கு காரணமாகும் ஒரு ரசாயனம்
அமெரிக்காவில் தாலேட்ஸ் என்ற ராசாயனத்தாலான பொருட்களை பயன்படுத்தியதால் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைவதாக நியூயார்க் பல்கலைக்கழகம் முன்னெடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் ஸ்கூல் ஆப் மெடிசின் நடத்திய தாலேட்ஸ் ரசாயனம் குறித்து ஆய்வு முடிவுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய லியோனார்டோ ட்ரசாண்டே தெரிவிக்கையில், தாலேட்ஸ் (phthalates) என்ற ரசயானத்தை பயன்படுத்தி நெகிழி, உணவைப் பதப்படுத்தும் பிளாஸ்டிக் கொள்கலன்கள், பொம்மை, ஆடை, ஷாம்பு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த பொருட்களின் வாயிலாக குறித்த நச்சுப்பொருள் உடலில் சென்று உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் உடலில் உள்ள நாளமில்லா அமைப்பை பாதிப்புக்கிறது. இதுவே ஹார்மோன் இடையூறு என்று அழைக்கப்படுகிறது.
அதிகமாக தாலேட்சை பயன்படுத்துவதற்கும் முன்கூட்டியே மரணிப்பதற்கும் நிறைய தொடர்புகள் இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இருதய நோய் காரணமாக அவர்கள் மரணமடைகின்றனர்.
நாங்கள் நினைத்ததை விட இந்த ரசாயனம் சமூகத்தில் ஏற்படுத்தும் மரணங்கள் அதிகமாக இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழக்கின்றனர்.
எனவே, நச்சு நிறைந்த தாலேட்சின் பயன்பாட்டை கட்டுப்படுத்தினால் அமெரிக்கர்களின் உடல் நலத்தையும் பொருளாதார நிலையைும் காப்பாற்ற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.